Tuesday, March 21, 2006

செந்தமிழ் நாடு

செந்தமிழ் நாடெனும் போதினிலே - -ன்பத்தேன்
வந்து பாயுது காதினிலே - எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே - எங்கள் (செந்தமிழ்)

வேதம் நிறைந்த தமிழ்நாடு - உயர்
வீரம் செறிந்த தமிழ்நாடு - நல்ல
காதல் புரியும் அரம்பையர் போலிளங்
கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு. (செந்தமிழ்)

காவிரி தென்பெண்ணை பாலாறு - தமிழ்
கண்டதோர் வையை பொருனைநதி - யென
மேவிய யாறு பலவோடத் - திரு
மேனி செழித்த தமிழ்நாடு. (செந்தமிழ்)

முத்தமிழ் மாமுனி நீள்வரையே - நின்று
மொய்ம்புறக் காக்குந தமிழ்நாடூ - செல்வம்
எத்தனை யுண்டு புவிமீதே - அவை
யாவும் படைத்த தமிழ்நாடு. (செந்தமிழ்)

நீலத் திரைக்கட லோரத்திலே - நின்று
நித்தந் தவஞ்செய் குமரியெல்லை - வட
மாலவன் குன்றம் -வற்றிடை யேபுகழ்
மண்டிக் கிடக்குந் தமிழ்நாடு. (செந்தமிழ்)

கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க்
கம்பன் பிறந்த தமிழ்நாடு - நல்ல
பல்வித மாயின சாத்திரத் தின்மணம்
பாரெங்கும் வீசும் தமிழ்நாடு. (செந்தமிழ்)

வள்ளுவன் தன்னை உலகினுக்கே - தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு - நெஞ்சை
அள்ளும் சிலப்பதி காரமென் றோர்மணி
யாரம் படைத்த தமிழ்நாடு. (செந்தமிழ்)

சிங்களம் புட்பகம் சாவக - மாதிய
தீவு பலவினுஞ் சென்றேறி - அங்கு
தங்கள் புலிக்கொடி மீன்கொடி யும்நின்று
சால்புறக் கண்டவர் தாய்நாடு. (செந்தமிழ்)

விண்ணை யிடிக்கும் தலையிமயம் - எனும்
வெற்பை யிடிக்கும் திறனுடையார் - சமர்
பண்ணிக் கலிங்கத் திருள்கெடுத் தார்தமிழ்ப்
பார்த்திவர் நின்ற தமிழ்நாடு. (செந்தமிழ்)

சீன மிசிரம் யவனரகம் - -ன்னும்
தேசம் பலவும் புகழ்வீசிக் - கலை
ஞானம் படைத்தொழில் வாணிபமும்மிக
நன்று வளர்த்த தமிழ்நாடு. (செந்தமிழ்)

மகா கவி பாரதியார்

No comments: