Friday, March 17, 2006

கண்ணன் என் விளையாட்டுப் பிள்ளை

தீராத விளையாட்டுப் பிள்ளை - கண்ணன்
தெருவிலே பெண்களுக் கோயாத தொல்லை. (தீராத)

தின்னப் பழங்கொண்டு தருவான்;- பாதி
தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்;
என்னப்பன் என்னையன் என்றால் - அதனை
எச்சிற் படுத்திக் கடித்துக் கொடுப்பான். (தீராத)

தேனொத்த பண்டங்கள் கொண்டு - என்ன
செய்தாலும் எட்டாத உயரத்தில் வைப்பான்;

மானொத்த பெண்ணடி யென்பான் - சற்று
மனமகிழு நேரத்தி லேகிள்ளி விடுவான். (தீராத)

அழகுள்ள மலர்கொண்டு வந்தே - என்னை
அழஅழச் செய்துபின்,"கண்ணை மூடிக்கொள்;
குழலிலே சூட்டுவேன்" என்பான் - என்னைக்
குருடாக்கி மலரினைத் தோழிக்கு வைப்பான். (தீராத)

பின்னலைப் பின்னின் றிழுப்பான்;- தலை
பின்னே திரும்புமுன் னேசென்று மறைவான்;
வன்னப் புதுச்சேலை தனிலே - புழுதி
வாரிச் சொரிந்தே வருத்திக் குலைப்பான். (தீராத)

புள்ளாங் குழல்கொண்டு வருவான்;- அமுது
பொங்கித் ததும்புநற் கீதம் படிப்பான்;
கள்ளால் மயங்குவது போல - அதைக்
கண்மூடி வாய்திறந் தேகேட் டிருப்போம். (தீராத)

அங்காந் திருக்கும்வாய் தனிலே - கண்ணன்
ஆறேழு கட்டெறும் பைப்போட்டு விடுவான்;
எங்காகி லும்பார்த்த துண்டோ? - கண்ணன்
எங்களைச் செய்கின்ற வேடிக்கை யொன்றோ? (தீராத)

விளையாட வாவென் றழைப்பான்;- வீட்டில்
வேலையென் றாலதைக் கேளா திழுப்பான்;
-ளையாரொ டாடிக் குதிப்பான்;- எம்மை
-டையிற் பிரிந்துபோய் வீட்டிலே சொல்வான். (தீராத)

அம்மைக்கு நல்லவன், கண்டீர்! - மூளி
அத்தைக்கு நல்லவன், தந்தைக்கு மஃதே,
எம்மைத் துயர்செய்யும் பெரியோர் - வீட்டில்
யாவர்க்கு நல்லவன் போலே நடப்பான். (தீராத)

கோளுக்கு மிகவுஞ் சமர்த்தன்;- பொய்மை
குத்திரம் பழிசொலக் கூசாச் சழக்கன்;
ஆளுக் கிசைந்தபடி பேசி - தெருவில்
அத்தனை பெண்களையு மாகா தடிப்பான். (தீராத)

-மகா கவி பாரதியார்

1 comment:

Anonymous said...

~nalla paDDu thanks